திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமடல்
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
நன்னுதலீர்* நம்பி நறையூரர்,-மன்னுலகில்
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,
மன்னு மடலூர்வன் வந்து.
பெரிய திருமடல்
கலிவெண்பா
2713-2790
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,
1
மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,
2
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,
என்னும் விதானத்தின் கீழால்,-இருசுடரை
3
மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்
பன்னு திரைக்கவரி வீச,-நிலமங்கை
4
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,
5
என்னும் மலர்ப்பிணையல் ஏய்ந்த,-மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,
6
என்னும் இவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கே,-அடியிணையைத்
7
தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட
8
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,
மன்னிய தாமரை மாமலர்பூத்து, அம்மலர்மேல்
9
முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள்,-அம்மறைதான்
10
மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே,-நான்கினிலும்
11
பின்னையது பின்னைப் பெயர்தரு மென்பது,ஓர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,
12
என்னும் இவையே நுகர்ந்துடலம் தாம்வருந்தி,
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும்,-வெஞ்சுடரோன்
13
மன்னும் அழல்நுகர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,
14
தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,
இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,
15
என்னவும் கேட்டறிவ தில்லை-உளதென்னில்
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,
16
அன்னதோர் இல்லியி னூடுபோய்,-வீடென்னும்
தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,
17
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?,-அதுநிற்க,
18
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,
அன்னவர்தாம் கண்டீர்க ளாயிரக்கண் வானவர்கோன்,
19
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப,-பொங்கொளிசேர்
கொன்னவிலும் கோளரிமாத் தான்சுமந்த கோலம்சேர்,
20
மன்னிய சிங்கா சனத்தின்மேல்,-வாணெடுங்கண்
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங்
21
கின்னிளம்பூந் தென்றல் இயங்க,-மருங்கிருந்த
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,
22
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,
அன்னவர்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,
23
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,
24
இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல்,-மழைத்தடங்கண்
25
மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,
26
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொன்செய் மண்டபத்துள்,
27
அன்ன நடைய அரம்பையர்தம் வைகவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று,-இருவிசும்பில்
28
மன்னும் மழைதவழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,
29
மன்னும் மணிவிளக்கை மாட்டி,-மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,
30
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,
31
சின்ன நறுந்தாது சூடி,-ஓர் மந்தாரம்
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்
32
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர,
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங் கிளமுலைமேல்,
33
நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த,-ங்கருஞ்சீர்
மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளமுலைமேல்,
34
பொன்னரும் பாரம் புலம்ப,-அகங்குழைந்தாங்
கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,
35
அன்னவர்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர்,-இதுவன்றே
36
அன்ன அறத்தின் பயனாவது?-ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால்,-காமத்தின்
37
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,
38
மன்னும் மடலூரார்ங என்பதோர் வாசகமும்,
தென்னுரையில் கேட்டறிவ துண்டு,-அதனை யாம்தெளியோம்;
39
மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,
40
அன்னதோர் தன்மை அறியாதார்,-ஆயன்வேய்
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்
41
மன்னும் மணிபுலம்ப வாடாதார்,-பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,
42
உன்னி யுடலுருகி நையாதார்,-உம்பர்வாய்த்
துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,
43
தம்முடலம் வேவத் தளராதார்,-காமவேள்
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,
44
பொன்னெடு வீதி புகாதார்,-தம் பூவணைமேல்
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,
45
இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,
பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன்
46
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,
47
மன்னும் வளநாடு கைவிட்டு,-மாதிரங்கள்
மின்னுருவில் விண்டேர் திரிந்து வெளிப்பட்டு
48
கன்நிறைந்து தீய்ந்து கழையுடைந்து கால்சுழன்று,
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,
49
கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்
துன்னு வெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால்,
50
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?,
51
பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணைநோக்கின்,
மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
52
கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணாது,
தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான்சென்று,அங்
53
கன்னவனை நோக்கா தழித்துரப்பி,-வாளமருள்
கன்னவில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,
54
பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?-பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னோடும்
55
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிரரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,
56
பன்னாக ராயன் மடப்பாவை,-பாவைதன்
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,
57
தன்னுடைய கொங்கை முகநெரிய,-தான்அவன்றன்
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது
58
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?,-சூழ்கடலுள்
59
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,
60
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,
கன்னியரை யில்லாத காட்சியாள்,-தன்னுடைய
61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,
மன்னும் மணிவரைத்தோள் மாயவன்,-பாவியேன்
62
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,
63
கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,
மன்னிய பேரின்பம் எய்தினாள்,-மற்றிவைதான்
64
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,
மன்னும் மலையரையன் பொற்பாவை,-வாணிலா
65
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,
66
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான்தரித்து,ஆங்
67
கன்ன அருந்தவத்தி னூடுபோய்,-ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள
68
மின்னி எரிவீச மேலெடுத்த சூழ்கழற்கால்,
பொன்னுலகம் ஏழும் கடந்தும்பர் மேல்சிலும்ப,
69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,
70
கொன்னவிலும் மூவிலைமேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?,
71
பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்
72
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,
73
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்,-நோக்குதலும்
மன்னன் திருமார்பும் வாயும் அடியிணையும்,
74
பன்னு கரதலமும் கண்களும்,-பங்கயத்தின்
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,
75
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
76
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரதகக் குன்றின் மருங்கே,-ஓர்
77
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,
78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலமிரண்டாய்,
79
அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,
80
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும்,-மதியுகுத்த
81
இன்னிலா வின்கதிரும் என்றனக்கே வெய்தாகும்,
தன்னுடைய தன்மை தவிரத்தான் என்கொலோ,-
82
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,
83
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,
84
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோ ரிர்வாளாம் என்செய்கேன்,
85
கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,
கொன்னவிலும் பூங்;கணைகள் கோத்துப் பொதவ ணைந்து,
86
தன்னுடைய தோள்கழிய வாங்கி,-தமியேன்மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்,
87
பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே,-பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,
88
நன்னறு வாசமற் றாரானும் எய்தாமே,
மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்,
89
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,
மன்னு மலர்மங்கை மைந்தன்,-கணபுரத்துப்
90
பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி,
91
முன்னிருந்து மூக்கின்று, மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்தறிவீ ரில்லையே?-விடையின்
92
துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்
93
தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,
94
கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நெடிதாகும்,
என்னிதனைக் காக்குமா சொல்லீர்?,-இதுவிளைத்த
95
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன்-மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன்-காயாவின்
96
சின்ன நறும்பூந் திகழ்வண்ணன்-வண்ணம்போல்
அன்ன கடலை மலையிட் டணைகட்டி,
97
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து
98
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை,-ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர்தம் பொன்னுலகும்,
99
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவ மாகி எரிவிழித்து,
100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே,-வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து,
101
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி,-அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
102
மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,
மன்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,
103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளைமருப்பில்,
கொன்னவிலும் கூர்நுதிமேல் வைத்தெடுத்த கூத்தனை,
104
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்,
105
தன்னின் உடனே சுழல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய
106
மன்னும் துயர்கடிந்த வள்ளலை,-மற் றன்றியும்,
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,
107
மன்னும் குறளுருவில் மாணியாய்,-மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்
108
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,
109
மன்னா* தருகென்று வாய்திறப்ப,-மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்
110
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ,-மேலெடுத்த
பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்
111
கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,
112
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை,-தாமரைமேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,
113
பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,
114
மன்னிய தண்சேறை வள்ளலை,-மாமலர்மேல்
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,
115
என்னுடைய இன்னமுதை எவ்வுள் பெருமலையை,
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,
116
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
பொன்னை, மரகதத்தைப் புட்குழியெம் போரேற்றை,
117
மன்னும் அரங்கத்தெம் மாமணியை,-வல்லவாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை,
118
தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,
119
மன்னும் கடல்மல்லை மாயவனை,-வானவர்தம்
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,
120
தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,
அன்னத்தை மீனை அரியை அருமறையை,
121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியை,-கோவலூர்
மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப்
122
பின்னும் முலையுண்ட பிள்ளையை,-அள்ளல்வாய்
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,
123
தென்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை,-
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை,
124
மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,
கொன்னவிலும் ஆழிப் படையாணை,-கோட்டியூர்
125
அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,
126
மன்னும் மதிள்கச்சி வேளுக்கை யாளரியை,
மன்னிய பாடகத்தெம் மைந்தனை,-வெஃகாவில்
127
உன்னிய யோகத் துறக்கத்தை, ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,
128
என்னை மனங்கவர்ந்த ஈசனை,-வானவர்தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,
129
அன்னவணை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை,-நீர்மலைமேல்
130
மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை, நாங்கூரில்
131
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
நன்னீர்த் தலைச்சங்க நாண்மதியை,-நான்வணங்கும்
132
கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
133
கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,
134
தன்னருளும் ஆகமும் தாரானேல்,-தன்னைநான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,
135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்,
136
தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன்,-தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்தம் சேரிக் களவின்கண்,
137
துன்னு படல்திறந்து புக்கு,-தயிர்வெண்ணெய்
தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்
138
மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,
139
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,
140
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்,
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,
141
தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,
மன்னு பறைகறங்க மங்கையர்தம் கண்களிப்ப,
142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்,
143
தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,
மன்னன் இராவணன்றன் நல்தங்கை,-வாளெயிற்றுத்
144
துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,
145
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரித்து,
மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும்,
146
தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காத்
தென்னுலுகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்
147
உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,
முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த,
148
மன்னியபூம் பெண்ணை மடல்.
148½
நேரிசை வெண்பா
என்னிலைமை யெல்லா மறிவித்தா லெம்பெருமான்,
தன்னருளும் ஆகமும் தாரானேல்,-பின்னைப்போய்
ஒண்டுறைநீர் வேலை யுலகறிய வூர்வன்நான்,
வண்டறைபூம் பெண்ணை மடல்.(*)

(*)இது கம்பர் பாடிய பாடல் என்பர்.
(*)மண்ணிற் பொடிப்பூசி வண்டிரைக்கும் பூச்சூடி,
பெண்ணை மடல்பிடித்துப் பின்பின்னே-அண்ணல்
திருநறையூர் நின்றபிரான் தேர்போகும் வீதி
பொருமறையாச் செல்வம் பொலிந்து.

(*)இத்தனியனை ஆக்கியோர் பெயர் தெரியவில்லை. இதைச் சிலர் அனுசந்திப்பதில்லை.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com